திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.12 திருப்பழனம்
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
1
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.
2
(*)மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.

(*) மனைக்காஞ்சியென்பது வீட்டுச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
3
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.
4
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.
5
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.
6
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.
7
*கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

*கூவைவாய் மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் - அவையாவன - யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், மூங்கிற்கணு, கொக்கின் கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் ஆகிய இடங்களில் உண்டாகும் முத்துக்கள்.
** காவிரிப்பூம்பாவை வாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரை மலர் ஆகிய இடங்களில் உண்டாகும் முத்துக்கள்.
8
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கணவளையுங் கடவேனோ.
9
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.36 திருப்பழனம் - திருநேரிசை
ஆடினா ரொருவர் போலு
    மலர்கமழ் குழலி னாலைக்
கூடினா ரொருவர் போலுங்
    குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்
    தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்
    பழனத்தெம் பரம னாரே.
1
போவதோர் நெறியு மானார்
    புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு
    வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்
    குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்
    பழனத்தெம் பரம னாரே.
2
கண்டராய் முண்ட ராகிக்
    கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்
    தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த
    வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்
    பழனத்தெம் பரம னாரே.
3
நீரவன் தீயி னோடு
    நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க
    பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க
    திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார்
    பழனத்தெம் பரம னாரே.
4
ஊழியா ரூழி தோறும்
    உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்
    பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்
    அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்
    பழனத்தெம் பரம னாரே.
5
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
    அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா
    நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் கலான் றன்னைக்
    கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
    பழனத்தெம் பரம னாரே.
6
ஆதித்தன் அங்கி சோமன்
    அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்
    போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்
    சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்
    பழனத்தெம் பரம னாரே.
7
காற்றனாற் காலற் காய்ந்து
    காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத்
    தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்
    இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்
    பழனத்தெம் பரம னாரே.
8
கண்ணனும் பிரம னோடு
    காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த
    எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி
    வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்
    பழனத்தெம் பரம னாரே.
9
குடையுடை அரக்கன் சென்று
    குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச
    எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்
    விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்
    பழனத்தெம் பரம னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.87 திருப்பழனம் - திருவிருத்தம்
மேவித்து நின்று விளைந்தன
    வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
    அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
    வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி
    யேனைகக் குறிக்கொள்வதே.
1
சுற்றிநின் றார்புறங் காவ
    லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு
    நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர
    சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
2
ஆடிநின் றாயண்டம் ஏழுங்
    கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை
    யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர
    சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்
    சாமைக் குறிக்கொள்வதே.
3
எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
    மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
    கெய்தவோர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர
    சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
4
முன்னியும் முன்னி முளைத்தன
    மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை
    மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி
    வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
5
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
    தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
    காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
    சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
6
மற்றுவைத் தாயங்கோர் மாலொரு
    பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங்
    கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர
    சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
7
ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
    டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி
    ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர
    சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
8
போகம்வைத் தாய்புரி புன்சடை
    மேலோர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட
    மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர
    சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
9
அடுத்திருந் தாய்அரக் கன்முடி
    வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி
    யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர
    சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக்
    குறிக்கொண் டருளுவதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com